அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

கிரிக்கெட் செய்தித்துளிகள்

ஆஸ்ட்ரேலிய வீரர் நேதன் பிராக்கன் ஓய்வு அறிவிப்பு 


ஆஸ்ட்ரேலியாவின் ஒருநாள் கிரிக்கெட் நிபுணரான இடது கை வேகப்பந்து வீச்சாளர் நேதன் பிராக்கன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

நியூசவுத்வேள்சைச் சேர்ந்த நேதன் பிராக்கன் 2007ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை வெற்றியில் ஆஸ்ட்ரேலியாவுக்காக பெரும்பங்கு வகித்தவர்.

இவர் 116 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவர் அதிகம் இடம்பெறாவீட்டாலும் ஒரு சில போட்டிகளில் விளையாடினார்.

கடைசியாக செப்டம்பர் 2009ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடினார் பிராக்கன். தற்போது காயம் காரணமாக அவர்  ஓய்வு அறிவித்துள்ளார்.
......

இந்தியா-இங்கிலாந்து போட்டி இல்லை: கொல்கத்தா மைதானத்தில் 3 போட்டி தான் நடைபெறும்; சரத்பவார் பேட்டி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் இந்தப்போட்டி நடைபெறுகிறது.  இந்தியாவில் மும்பை, சென்னை, கொல்கத்தா, டில்லி, பெங்களூர், நாக்பூர், அகமதபாத், மொகாலி ஆகிய மைதானங்களிலும், இலங்கையில் கொழும்பு, ஹம்பன்டோடா, பல்லி கெலே ஆகிய மைதானங்களிலும், வங்காளதேசத்தில் மிர்பூரிலும் போட்டி நடை பெறுகிறது.

புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் 4 ஆட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தியா- இங்கிலாந்து (27ந்தேதி), தென்ஆப்பிரிக்கா- அயர்லாந்து (மார்ச் 15), அயர்லாந்து-நெதர்லாந்து (மார்ச்18), கென்யா- ஜிம்பாப்வே (மார்ச் 20) ஆகிய போட்டிகள் அங்கு நடைபெறும் என்று ஏற் கனவே வெளியிடப்பட்ட அட்டவணையில் தெரிவிக்கப்பட்டது.

உலக கோப்பை போட்டிக்காக கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) விதித்த கெடுவுக்குள் ஸ்டேடியத்தின் பணி முடிவடையவில்லை. இதனால் இந்தியா- இங்கிலாந்து மோதும் முதல் ஆட்டத்தை அங்கு நடத்த இயலாது. மற்ற 3 ஆட்டங்களையும் நடத்தலாம் என்று ஐ.சி.சி. கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

இது பெங்கால் கிரிக்கெட் சங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் 7-ந்தேதி வரை காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டு இருந்தது. இந்திய கிரிக்கெட் வாரியம் மூலம் விடுக்கப்பட்ட இந்த கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்து விட்டது. மறுபரிசீலனை பேச்சுக்கே இடமில்லை என்று ஐ.சி.சி. திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

இதன் காரணமாக இந்தியா- இங்கிலாந்து மோதும் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறாது. வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐ.சி.சி. தலைவரும், மத்திய மந்திரியுமான சரத்பவார் கூறியதாவது:-

கொல்கத்தா மைதானத்தில் முதல் ஆட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் மற்ற 3 ஆட்டங்களும் அங்கு நடைபெற வாய்ப்பு உள்ளது. அதற்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும் என்று நம்புகிறேன். இது சம்பந்தமாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எழுத்து பூர்வமாக தெரிவித்து விட்டோம். கிரிக்கெட் வாரிய தலைவர் சசாங்க மனோகரிடமும் பேசிவிட்டேன். ஸ்டேடியம் தயாரானால் மட்டுமே அங்கு எஞ்சிய 3 போட்டியையும் நடத்த முடியும் என்பதை கூறிவிட்டேன்.

மேற்கு வங்காள முதல்- மந்திரி என்னிடம் கேட்டுக் கொண்டதற்கு இனங்க நான் தனிப்பட்ட முறையில் இதில் தலையிட்டேன். ஆனால் ஐ.சி.சி. குழு வரும்போது மைதானம் தயாராக இல்லை. இவ்வாறு சரத்பவார் கூறினார்.   இந்தியா-இங்கிலாந்து மோதும் ஆட்டம் பெங்களூரில் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் டால்மியா இன்னும் நம்பிக்கையில் உள்ளார்.
ஈடனுக்கு மறுப்பு: பெங்களூருவுக்கு வாய்ப்பு - பி.சி.சி.ஐ., பரிந்துரையால் சர்ச்சை

இந்தியா-இங்கிலாந்து மோதும் உலக கோப்பை போட்டியை, கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த இயலாது என ஐ.சி.சி., உறுதியாக தெரிவித்து விட்டது. இப்போட்டியை பெங்களூருவுக்கு மாற்றலாம் என, பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பெங்கால் கிரிக்கெட் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை (பிப்., 19 - ஏப்., 2) நடக்க உள்ளது. இதில் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் மொத்தம் நான்கு போட்டிகள் நடக்க இருந்தன. ஆனால் மைதானத்தில் கட்டுமானப் பணிகள், நிறைவு பெறவில்லை. இதையடுத்து வரும் பிப்., 27ல் நடக்க இருந்த இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் போட்டியை, வேறு மைதானத்தில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) முடிவெடுத்தது. இப்பிரச்னையில் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் தலையிட்டு, போட்டியை மீண்டும் கொண்டு வரும் பொறுப்பை, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் கான்டி கங்குலி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் ஒப்படைத்தார். இவர்கள் ஐ.சி.சி., தலைவர் சரத்பவாரை நேரில் சந்தித்து முறையிட்டனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், இதில் தலையிட்டார். இவ்வாறு மாநில முதல்வர், மத்திய, மாநில அமைச்சர்கள் என, பல்வேறு தரப்பில் இருந்தும், ஐ.சி.சி.,க்கு கோரிக்கை விடப்பட்டது. இதனால், ஐ.சி.சி., முடிவில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டியை மாற்றுவது என்ற திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என, நேற்று ஐ.சி.சி., உறுதியாக தெரிவித்தது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில்,"" கோல்கட்டாவில் போட்டியை நடத்தும் வாய்ப்பு இல்லை என்ற தகவலை ஐ.சி.சி., அனுப்பியது. இதனால், கோல்கட்டாவுக்குப் பதிலாக, பெங்களூருவில் நடத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளோம்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டால்மியா அதிர்ச்சி:
இந்த முடிவை கேட்டதும் கோல்கட்டா கிரிக்கெட் சங்க (சி.ஏ.பி.,) தலைவர் டால்மியா அதிர்ச்சி அடைந்தார். இவர் கூறுகையில்,"" ஐ.சி.சி., தலைவர் சரத்பவார், பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன், தலைமை அதிகாரி ரத்னாகர் ஷெட்டி ஆகியோரிடம் 5 அல்லது 6 முறை டெலிபோனில் பேசினேன். இறுதியில், பலன் எதுவும் கிடைக்கவில்லை,'' என்றார். 

எல்லாம் முடிந்தது:
இதுபற்றி சி.ஏ.பி., செயலர் பிஸ்வரப் தே கூறுகையில்,"" எப்படியும் எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தோம். முதல்வர் தலையிட்ட பிறகும், அவர்கள் சம்மதிக்கவில்லை. தற்போது எல்லாம் முடிந்து விட்டது. இதுகுறித்து ஒன்றும் பேசமுடியவில்லை. ஆனால், இந்திய அணி விளையாடும் உலக கோப்பை போட்டி, ஒரு மைதானத்துக்கு ஒன்று தான் ஒதுக்கப்படும் என்ற விதி உள்ள நிலையில், பெங்களூருவுக்கு மட்டும் எப்படி இரண்டு போட்டிகளை ஒதுக்கலாம். இது குறித்து பி.சி.சி.ஐ., கூட்டத்தில் கேள்வி எழுப்புவோம்,'' என்றார்.
.........

இளம் வீரர்கள் சாதிப்பார்கள்: ஹர்பஜன்

"சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, யூசுப் பதான் உள்ளிட்ட இளம் வீரர்கள் உலக கோப்பை தொடரில் சாதிப்பார்கள் '' என, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரில் அசத்தியது. ஒருநாள் தொடரை வெல்லவில்லை என்றாலும், கடைசி வரை போராடித்தான் வீழ்ந்தது. இந்த அனுபவம் குறித்து ஹர்பஜன் சிங் கூறியது:

பொதுவாக பவுலர்கள் தேவையான நேரங்களில் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று தான் கேப்டன்கள் எதிர்பார்ப்பார்கள். இது தான் அடிப்படை. முன்னாள் கேப்டன் கங்குலி, தற்போதைய கேப்டன் தோனி இருவருமே, என்னிடம் இருந்து இதைத்தான் எதிர்பார்த்தனர். ஸ்ரீநாத், ஜாகிர் கானிடம் கங்குலி எதிர்பார்த்தது என்னவோ, அதைத்தான் தோனி இப்போது என்னிடம் எதிர்பார்க்கிறார். அடுத்து பவுலிங்கிற்கு ஏற்ப சரியாக பீல்டிங் அமைக்க வேண்டும். இதில் இரு கேப்டன்களுமே, என் மீது நம்பிக்கை வைத்து, பீல்டிங்கை என் விருப்பப்படி விட்டுவிடுவார்கள். இதனால் தான் சிறப்பாக செயல்படுகிறேன். இந்த இரு கேப்டன்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவெனில், தோனி அமைதியாக இருப்பார். ஆனால், கங்குலி தனது உணர்ச்சிகளை உடல் அசைவுகள் மூலம் வெளிப்படுத்தி விடுவார். 

லேசான நம்பிக்கை:
பேட்டிங்கின் போது ஆரம்பத்தில் சரியான முறையில் பந்து வந்தால் போதும், அதை அடித்து விடுவேன், அவ்வளவு தான். ஆனால், இப்போது பந்தை நன்கு கவனித்து பிறகு அடிக்க முயற்சிக்கிறேன். பந்துகள் அளவுக்கு அதிகமாக "பவுன்ஸ்' ஆன தென் ஆப்ரிக்காவில், என்னைப் பொறுத்தவரையில் சிறப்பாகத் தான் செயல்பட்டோம். இது உலக கோப்பை தொடர் துவங்கவுள்ள நிலையில் லேசான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் வேண்டும்:
இதற்கு முன் கடந்த 2002ல் நியூசிலாந்து சென்ற இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை மோசமாக இழந்து திரும்பியது. பின் 2003 உலக கோப்பை தொடரில், முற்றிலும் வித்தியாசமாக செயல்பட்ட இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. இதே போல மீண்டும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் உண்மையில் நம்புகிறேன். அதைவிட ஒருபடி மேலாக கோப்பை வென்றால், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பரிசாக அமையும். இதற்காக ரசிகர்கள் எங்களுக்கு 100 சதவீதத்துக்கும் மேலான ஆதரவை தருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். 

இளமை எதிர்பார்ப்பு:
2003ல் அணியில் இருந்த ஜாகிர் கான், நெஹ்ரா, சேவக் ஆகியோர் அப்போது, குறைந்த அளவிலான போட்டிகளில் தான் பங்கேற்று இருந்தனர். இம்முறை "சீனியர்' சச்சின், ஆலோசகராக கங்குலி போன்றவர்கள் எங்களுடன் உள்ளனர். தவிர<, இளம் வீரர்கள் ரெய்னா, யூசுப் பதான், விராத் கோஹ்லி ஆகியோரிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறோம். நெருக்கடியான நேரங்களில் இவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். சர்வதேச அளவில் போதிய அனுபவம் பெற்றுள்ள இவர்கள், அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று நம்புகிறேன். 
இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.
.........

உலக கோப்பையை இந்திய அணி வெல்லும்: கிரிக்கெட் வீரர் பாலாஜி நம்பிக்கை

உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று கிரிக்கெட் வீரர் பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். வி.ஐ.டி. ரிவேரா கலை விழாவில் கலந்து கொண்டு கிரிக்கெட்- ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கிரிக்கெட் வீரர் பாலாஜி பரிசு வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி அனைத்து துறையிலும் சிறந்து விளங்குகிறது. 1983ம் ஆண்டுக்கு பிறகு 2011 ம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும்.

இந்தியாவில் பிறந்ததற்காக பெருமைபடுகிறேன். வி.ஐ.டி. விழாவில் கலந்து கொண்டதை சிறப்பாக நினைக்கிறேன். அப்துல்கலாம், சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர்.ரகுமான் 3 பேரும் என்னை வெகுவாக கவர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!