அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

கிரிக்கெட் செய்தித்துளிகள்

சச்சினுக்கு உலகக் கோப்பையை பரிசளிப்போம்: மகேந்திர சிங் தோனி

இந்திய அணி சார்பில் சச்சினுக்கு வழங்கக் கூடிய மிகப் பெரும் பரிசு, உலக கோப்பை தான்,' என, கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் (பிப்.19-ஏப்.2) தொடரை நடத்துகின்றன. இதில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தொடர்ந்து ஆறாவது முறையாக (1992-2011) பங்கேற்கிறார். இது இவருக்கு கடைசி வாய்ப்பாகவும் அமையலாம். இதுவரை இவர் இடம் பெற்றிருந்த அணி, ஒருமுறை கூட உலக கோப்பை வென்றதில்லை. இம்முறை தோனி தலைமையிலான இந்திய அணி, கோப்பை வென்று இவரது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தோனி கூறியதாவது: இந்தியர்கள் அனைவருக்கும் சச்சினை மிகவும் பிடிக்கும்.தொடர்ந்து ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் விளையாட உள்ள இவருக்கு, இது கடைசி வாய்ப்பாக அமையலாம். இவர் நிறைய உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அது சாத்தியமல்ல. எனவே இம்முறை இந்திய அணி, சச்சினுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும். இது தான் அவருக்கு அளிக்கப்படும் மிகப் பெரும் பரிசாக அமையும். 

சிறந்த அணி:
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீரர்களிடமும் ஒரு திறமை உள்ளது. அதனை சிறந்த முறையில் வெளிப்படுத்தும் பட்சத்தில், இந்திய அணி நிச்சயம் கோப்பை வென்று சாதிக்கும். விக்கெட் கீப்பராக நான் மட்டுமே இடம் பெற்றுள்ளேன். இது போட்டியில் எவ்வித நெருக்கடியும் அளிக்காது என நினைக்கிறேன். ஒருவேளை எனக்கு ஏதாவது நடந்துவிட்டால், மாற்று விக்கெட் கீப்பரை உடனடியாக நியமித்துவிடலாம். சிறந்த பவுலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பந்துவீசும் திறமை படைத்தவர்கள். இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது. எனவே எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல், ஒவ்வொரு போட்டியிலும் முழுதிறமையை வெளிப்படுத்தினால், சுலபமாக வெற்றி பெறலாம்.

மீண்டும் கோப்பை:
கடந்த 2004ல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த எனக்கு, 2007ல் இந்திய அணி "டுவென்டி-20' உலக கோப்பை வென்றது மறக்க முடியாத தருணமாக அமைந்தது. வரும் உலக கோப்பை (50 ஓவர்) தொடரிலும் சாதிக்க காத்திருக்கிறேன். எனது கவனம் முழுவதும் வங்கதேச அணிக்கு எதிராக தாகாவில் வரும் 19ம் தேதி நடக்கவுள்ள முதல் போட்டியின் மீது உள்ளது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடரை வெற்றியுடன் துவக்க திட்டமிட்டுள்ளேன்.
எளிதான அட்டவணை:

கடந்த 2007ல் லீக், "சூப்பர்-8', அரையிறுதி, பைனல் என சிக்கலான அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. இம்முறை லீக், காலிறுதி, அரையிறுதி, பைனல் என எளிதாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த ஒரு அணியும், முதல் ஒரு சில லீக் போட்டிகளில் தோல்வி அடைந்தால் கூட, அடுத்த போட்டிகளில் எழுச்சி பெற்று காலிறுதிக்கு முன்னேறிவிடலாம். இதன்மூலம் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என நினைக்கிறேன். இந்திய அணியின் ஒவ்வொரு போட்டிக்கும் போதுமான இடைவெளி உள்ளது. 

யு.ஆர்.டி.எஸ்., முறை:
உலக கோப்பை தொடரின் "நாக்-அவுட்' சுற்றுகளில், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை முறை (யு.ஆர்.டி.எஸ்.,) அமல்படுத்தப்படுகிறது. முன்னதாக இந்திய அணி, இதனை அதிக அளவில் பயன்படுத்தாததால், உலக கோப்பை தொடருக்கு முன் இது குறித்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் போட்டியில் சரியான இடத்தில் இம்முறையை பயன்படுத்த முடியும்.

ஈடன் ஏமாற்றம்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க இருந்த போட்டி, பெங்களூருக்கு மாற்றப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. ஏனெனில் வரலாற்று சிறப்பு மிக்க மைதானத்தில், சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் ஆதரவோடு விளையாடுவது சிறப்புத்தன்மை வாய்ந்தது. இதற்கான முடிவு எங்கள் கையில் இல்லாததால், ரசிகர்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தோனி கூறினார்.
---

நடுவர்கள் பட்டியல்: ஐ.சி.சி. அறிவிப்பு

உலகக் கோப்பை போட்டியின் லீக் சுற்றுக்கான நடுவர்கள், ரெப்ரிக்கள் ஆகியோரின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட கவுன்சில் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

பிப்ரவரி 19-ம் தேதி டாக்காவில் நடைபெறும் இந்தியா- வங்கதேச அணிகள் மோதும் ஆட்டத்திற்கு இங்கிலாந்தின் ஸ்டீவ் டேவிஸ், இலங்கையின் குமார் தர்மசேனா ஆகியோர் கள நடுவர்களாக பணிபுரிகின்றனர்.

கள நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ், குமார் தர்மசேனா, அலீம் தார், மரைஸ் எராஸ்மஸ், இயன் குட், டேரில் ஹார்பர், டோனி கில், அசோகா டி சில்வா, சைமன் டபெல், ராட் டக்கர், ரிச்சர்ட் கெட்டில்போரப், நிகேல் லாங், புரூஸ் ஆக்ùஸன்போர்டு, அமிஸ் சஹீபா, ஷாவிர் தாராபூர் ஆகியோர் கள நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாக் அவுட் சுற்றுக்கான நடுவர்கள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!