அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

கிரிக்கெட் செய்தித்துளிகள்

சேவக்கிற்கு பீட்டர்சன் பாராட்டு

சேவக் போன்ற வீரர்கள் தங்களது அதிரடியான ஆட்டத்தினால் போட்டியின் தன்மையை விரைவில் மாற்றிவிடுவார்கள்,'' என, இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக உலக கோப்பை தொடரில் சாதிக்க காத்திருப்பவர் அனுபவ வீரர் பீட்டர்சன். இவர் சேவக், கெய்ல் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் குறித்து கூறியது:
தற்போதுள்ள அணிகளில் ஒருசில வீரர்கள், சிறப்பான ஆட்டத்தால் போட்டியின் தன்மையை மாற்றி விடுவார்கள். இதில் இந்தியாவின் சேவக் முக்கியமானவர். சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கும் இவர், 10 அல்லது 15 ஓவர்கள் நின்றுவிட்டால் போதும். அவ்வளவு தான், போட்டியின் நிலைமையே தலைகீழாகி விடும். வெஸ்ட் இண்டீசின் கெய்லும் அப்படித்தான். இவர்களுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்பதை எப்போதும் விரும்புவேன். 

இவ்வாறு பீட்டர்சன் தெரிவித்தார்.
----

'டாஸ்' வெல்வது முக்கியம் - கபில்தேவ் கருத்து

உலக கோப்பை போட்டிகளின் போது, "டாஸ்' வெல்வது மிகவும் முக்கியம். இதற்கு அதிருஷ்டமும் கைகொடுக்க வேண்டும்,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

வலுவான பேட்டிங் வரிசையே இந்திய அணியின் பலம். இது குறித்து டெல்லியில் அவர் நேற்று கூறியதாவது: பேட்டிங்தான் இந்திய அணியின் பலமாக விளங்குகிறது. அதில் நாம் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். அதே சமயம் டாசில் ஜெயிப்பதும் மிக முக்கியம். இதில் கேப்டன் டோனிக்கு இனியாவது அதிர்ஷ்டம் கை கொடுக்கும் என நம்புகிறேன். 

இந்திய அணிக்காக கடந்த 1983ல் உலக கோப்பை வென்று தந்தவர் கேப்டன் கபில்தேவ். இம்முறை இந்திய அணிக்கு உள்ள வாய்ப்பு குறித்து இவர் கூறியது:
இந்திய அணியில் சிறப்பான "மேட்ச் வின்னர்கள்' உள்ளனர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது "பேப்பர்' அளவில் தான். ஆனால் பீல்டிங் மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன்கள் எடுப்பதில் இந்திய அணி பின்தங்கியுள்ளது. மற்றபடி, பேட்டிங்கில் அதிக பலத்துடன் உள்ளனர். இதன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதேநேரம் அதிருஷ்டமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் "டாஸ்' வெல்வது மிகவும் முக்கியம். ஒருவேளை எதிரணி வென்று, முதலில் பேட்டிங் செய்து 300 அல்லது அதற்கு மேலான ரன்களை குவித்து விட்டால், அப்புறம் இலக்கை எட்டுவது என்பது மிகவும் கடினமாகிவிடும். அதேநேரத்தில், நாம் முதலில் பேட்டிங் செய்து நாம் 300க்கும் அதிகமான ரன்களை எடுத்துவிட்டால், அப்புறம் பவுலர்கள் வெற்றிதேடித்தந்து விடுவார்கள். விக்கெட் கீப்பராக உள்ள டோனி நல்ல பேட்ஸ்மேனாகவும் இருப்பது கூடுதல் சாதகம். சேவக், சச்சின், ரெய்னா, யுவராஜ், பதான் ஆகியோரும் பந்துவீசக் கூடியவர்கள் என்பதால், அணியில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் இருந்தாலே போதுமானது என நினைக்கிறேன்.  

எனது தலைமையிலான அணி 1983ம் ஆண்டு உலக கோப்பையை வென்றதற்கு கூட்டு முயற்சிதான் காரணம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விளையாடினோம். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. பைனலுக்கு முன்னேறியதை நம்பவே முடியவில்லை. இறுதிப் போட்டியில் உற்சாகமாக விளையாடி வென்றோம். சக வீரர்களின் முழுமையான ஒத்துழைப்பை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. கோப்பையுடன் நாடு திரும்பியதை மறக்கவே முடியாது. 

இப்போது உள்ளூரில் போட்டிகள் நடப்பதால் ரசிகர்களின் அமோகமான ஆதரவு இந்திய அணிக்கு உற்சாகம் அளிக்கும். அதுவே நெருக்கடியாகவும் அமைந்துவிடக் கூடிய வாய்ப்பு உள்ளது. வீரர்கள் இதை சரியான வகையில் சமாளிக்க வேண்டும். இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு கபில்தேவ் கூறினார்.
நெருக்கடியை சிறப்பாக எதிர்கொள்வோம் - சொல்கிறார் கேப்டன் தோனி

கடந்த முறை போல் அல்லாமல், இம்முறை நெருக்கடியை கூடுதல் பொறுப்பாக எடுத்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு, உலக கோப்பை தொடரில் சாதிக்க முயற்சிப்போம்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.கடந்த 2007 உலக கோப்பை தொடரின் போது, டிராவிட் தலைமையில் சென்ற இந்திய அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த எதிர்பார்ப்புகளே அணிக்கு பெரும் நெருக்கடியாக அமைய, முதல் சுற்றுடன் நாடு திரும்பியது. இது இந்திய ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதுபோல, இம்முறை சொந்த மண்ணில் தொடர் நடப்பதால், இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:

உலக கோப்பை தொடருக்காக, சிறப்பான முறையில் தயாராகி உள்ளோம். எங்களது திறமையை முழு அளவில் இத்தொடரில் வெளிப்படுத்துவோம். போட்டிகளின் போது ஏற்படும் எதிர்பார்ப்புகள், நெருக்கடிகள் போன்றவற்றை கூடுதல் பொறுப்பாக எடுத்துக்கொண்டு சிறப்பாக சமாளிப்போம். ஆனால் எப்படியும் தோல்வியடைய மாட்டோம். 
மற்றபடி கோப்பை வெல்வது குறித்து ஒன்றும் கூற முடியாது. ஏனெனில் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில், என்ன நடக்கும் என்று முன்னதாக கணிக்க முடியாது. நாங்கள் ஒருவரை ஒருவர் நம்புகிறோம். தவிர, எங்களது பயிற்சிகள் உள்ளிட்டவைகள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளோம். இதுதான் ஒவ்வொரு போட்டியையும் சரியான மனநிலையுடன் எதிர்கொள்ள உதவும். 

நல்லதே நடக்கும்:
கடந்த 2007 தொடரில் முதல் போட்டியில் வங்கதேசத்துடன் அடைந்த தோல்வியால், தொடரைவிட்டு வெளியேற நேர்ந்தது. அதனால் இம்முறையும் அந்த அணியுடன் முதல் போட்டியில் பங்கேற்பதால், அப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் நடந்தவைகள் நடந்ததாக இருக்கட்டும். நடப்பவை எப்போதும் நல்லதாக நடக்கும் என்று நம்புவோம். நான் உங்களை விட அதிக நம்பிக்கை உடையவன்.

ஓய்வுக்கு ஆதரவு:
மற்ற விளையாட்டுகளில் ஓய்வுகள் எப்படி உள்ளது என்று எனக்குத் தெரியாது. ஆனால் கிரிக்கெட்டை மட்டும் தான் அதிக விமர்சனம் செய்கிறோம். குறுகிய இடைவெளி இருந்தால், அதிக போட்டிகளில் பங்கேற்க வேண்டியது உள்ளதே என்கிறோம். அதிக இடைவெளி இருந்தால், இது மிகவும் அதிகம் என்கிறோம். கிரிக்கெட்டை பொறுத்தவரையில், சரியான அட்டவணையை முடிவு செய்வது கடினம். தற்போது கிடைத்திருக்கும் இந்த இடைவெளியே நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் சிறிய காயங்களில் இருந்தும் மீண்டு, "ரிலாக்சாக' அணிக்கு திரும்ப உதவும்.

சிறப்பாக விளையாடுவோம்:
இந்திய உலக கோப்பை அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பர் இல்லை என்கிறார் ஒருவர். மற்றொருவர், இடது கை சுழற்பந்து வீச்சாளர் இல்லை என்கிறார். பொதுவாக அணித்தேர்வில் எல்லோருடைய கருத்துக்கும் இசைந்து போவது என்பது முடியாத காரியம். என்னைப் பொறுத்தவரையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேர்களும், உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படுவார்கள்.

இவ்வாறு தோனி தெரிவித்தார்.
-----

கிரிக்கெட்டின் ஒபாமா தோனி - பிரவீண் குமார் பாராட்டு

"இந்திய அணி கேப்டன் தோனி தலைமை பண்பில் சிறந்து விளங்குகிறார். இவர் "கிரிக்கெட்டின் ஒபாமாவாக திகழ்கிறார், என, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி. பதட்டமான நேரத்திலும் கூட மிகவும் "கூலாக செயல்படக் கூடியவர். இவர், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா போல தலைமைப் பண்பில் மிகச் சிறந்து விளங்குவதாக, சக வீரர் பிரவீண் குமார் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் துவங்க உள்ள உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள உற்சாகத்தில் இவர் கூறியது:

உலக கோப்பை தொடர் என்பது சாதாரண தொடர் அல்ல. இதில் அதிக உணர்ச்சிகளுடன் கூடிய எதிர்பார்ப்புகள் வித்தியாசமாக இருக்கும். இதற்கான இந்திய தேசிய அணியில் இடம் பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இத்தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்ததன் மூலம், எனது கனவு நிறைவேறியுள்ளது. 
இந்திய ஆடுகளங்கள், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போல் இல்லாமல் மெதுவாக செயல்படும். இங்கு, சூழ்நிலைக்கேற்ப பல்வேறு வகையில் பவுலிங் செய்ய வேண்டியது இருக்கும். போட்டியின் போது ஜாகிர் கானும், ஆஷிஸ் நெஹ்ராவும் எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார்கள். நெருக்கடியான நேரங்களில் பயன்தரும் வகையிலான ஆலோசனைகளை தந்து உதவுவார்கள்.

பேட்டிங் ஆறுதல்:
உத்தர பிரதேச அணி மற்றும் இந்தியா "ஏ அணிகளில் பேட்டிங்கில் நான் தான் துவக்க ஆட்டக்காரர். இதனால் எனது பேட்டிங் திறமை எனக்கு நன்கு தெரியும். ஆனால் இந்திய அணி என்று வரும் போது, உலகத்தரம் வாய்ந்த துவக்க வீரர்கள் உள்ளனர். எப்படி இருப்பினும், பேட்டிங்கில் என்னால் இயன்ற அளவுக்கு ரன்களை எடுத்து அணிக்கு உதவினால் மகிழ்ச்சியடைவேன்.

கோப்பை வாய்ப்பு:
சமீபத்தில் பல தொடர்களில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது. இது உலக கோப்பை தொடருக்கு சாதகமாக இருப்பது உறுதி. தற்போதுள்ள இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். இத்தொடருக்கான பயிற்சியும் நல்லவிதமாக அமைந்துள்ளது. இதனால் எப்படியும் கோப்பை வெல்லமுடியும் என நம்புகிறேன்.

கிரிக்கெட்டின் ஒபாமா:
இதற்கு அணியின் கேப்டன் தோனி உதவுவார். ஏனெனில் போட்டியில் தோல்வியடையக் கூடிய மோசமான நிலையில் கூட, தோனி "கூலாக இருப்பார். வழக்கத்துக்கு மாறாக கடைசி வரைக்கும் நம்பிக்கையுடன் காணப்படுவார். சக வீரர்களை ஊக்குவித்து, அவர்களது திறமையை வெளிக்கொண்டு வருவார். மொத்தத்தில் கிரிக்கெட்டின் "ஒபாமா என்று தோனியை அழைக்கலாம்.

நம்பிக்கை உள்ளது:
தென் ஆப்ரிக்க தொடரில் அடைந்த காயத்துக்கு சரியான முறையில் சிகிச்சை எடுத்து வருவதால், நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. உலக கோப்பை போட்டிகள் துவங்கும் முன்பாக, சரியான பயிற்சிகள் எடுத்து மீண்டு விடுவேன் என்று நம்பிக்கை உள்ளது.
இந்தியாவுக்கு அடுத்து இங்கிலாந்து அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. சமீபகாலமாக நிலையான ஆட்டத்தை தொடர்ந்து வரும், இவர்கள் இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்.

இவ்வாறு பிரவீண் குமார் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் சிகிச்சை
உலக கோப்பை தொடர் துவங்கவுள்ள நேரத்தில், பிரவீண் குமாரின் முழங்கை காயம் இன்னும் முழுமையாக குணமடையாமல் உள்ளது. இதனால் காயத்துக்கு சிகிச்சை , பிரவீண் குமார் இங்கிலாந்து செல்கிறார். ஒருவேளை காயம் குணமடையாத பட்சத்தில், ஸ்ரீசாந்த் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!