அஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா?...இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் cmpirfan@gmail.com - adiraiafca@gmail.com ...- Admin

சென்னை அணியை இழந்து விட்டேன் - முரளிதரன் உருக்கம்

கடந்த 3 முறை நான் பங்கேற்ற, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், கேப்டன் தோனியையும் இழந்து விட்டேன்,'' என, இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.


நான்காவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் வரும் ஏப். 8 ம் தேதி இந்தியாவில் துவங்குகிறது. இத்தொடருக்கான வீரர்கள் ஏலம், சமீபத்தில் பெங்களூருவில் நடந்தது. இதில், இலங்கை சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், கொச்சி அணிக்காக ஏலத்தில் (ரூ. 4.96 கோடி) எடுக்கப்பட்டார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். ஆனால் இந்த முறை கொச்சி அணிக்காக விளையாட உள்ளார்.


இது குறித்து முரளிதரன் கூறியது: சென்னை அணிக்காக விளையாடியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. எனது மனைவி சென்னையை சேர்ந்தவர் தான். அணி மாறியதால், அவர் மிகவும் வருத்தப்பட்டார். ஆனால் விளையாட்டில் எதுவும் நடக்கலாம். என்னைப் பொறுத்த வரை, சென்னை அணியையும், கேப்டன் தோனியையும் இழந்து விட்டதாக கருதுகிறேன்.

சென்னை அணியின் கேப்டன் தோனி, திறமையானவர். இவரது தலைமையில் கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்., தொடர் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் கோப்பை வென்றது மகிழ்ச்சியான விஷயம். இத்தொடர்களில் சென்னை அணியின் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளேன்.

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் கொச்சி அணிக்காக பங்கேற்கிறேன். புதிய கேப்டன், புதிய அணி என்பதால் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி உள்ளேன். கொச்சி அணி என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது. வழக்கம் போல எனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த தயாராகி வருகிறேன். கொச்சி சூழ்நிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என நம்புகிறேன். தவிர, அங்குள்ள மக்களுக்கு எனது மொழியும் (தமிழ்) புரியும் என எதிர்பார்க்கிறேன்.

கொச்சி அணியில் ஜெயவர்தனா, பிரண்டன் மெக்கலம், லட்சுமண், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இருப்பினும் திறமையான இளம் இந்திய வீரர்கள் கொச்சி அணிக்கு தேவை. இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் ஐ.பி.எல்., தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளேன்.
அதிர்ச்சி அளித்தது:

ஐ.பி.எல்., ஏலத்தில் இந்தியாவின் சவுரவ் கங்குலி, இலங்கையின் ஜெயசூர்யா ஆகியோர் எடுக்கப்படாதது அதிர்ச்சி அளித்தது. ஆனால் இது குறித்து நான் ஒன்றும் கருத்து கூற முடியாது. இது அணி உரிமையாளர்களின் கையில் தான் உள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் சிறந்த வீரர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவ்வாறு முரளிதரன் கூறினார்.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!